சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகரில் கார், வேன், சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் விதிகளுக்குப் புறம்பாக எல்.இ.டி முகப்பு விளக்குகளை பொருத்துவது அதிகரித்து வருகிறது. அதிக ஒளியை தரக்கூடியது என்பதால் அந்த விளக்குகளை வாங்கி கூடுதலாக வாகனங்களில் பொருத்தி விடுகின்றனர்.
இந்நிலையில் தற்போதுள்ள எல்.இ.டி விளக்குகள் மிக அதிக அளவில் ஓளி தரக்கூடியது என்பதால் எதிரே வரும் வாகன ஓட்டுனர்கள் கடுமையாக கண்கள் பாதிக்கப்பட்டு தடுமாறி வருகின்றனர்.
பொதுவாக ஒவ்வொரு வாகனத்திற்கும் எந்த வகையான முகப்பு விளக்கு பொருத்த வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களில் பொருத்தப்பட்ட விளக்குகளையே, எதிரே வாகனங்கள் வரும்போது ஒளி அளவை குறைக்கவில்லை என்றால் கண்களை கூசச்செய்து தடுமாற வைக்கும். இந்த நிலையில் அதிக ஒளி தரக்கூடிய எல்.இ.டி முகப்பு விளக்குகளையும் போட்டுக் கொண்டு வருவதால், எதிரே செல்லும் வாகன ஓட்டுனர்களின் கண்களில் திறன் குறைவு ஏற்பட்டு கண்கள் பாதிக்கப்படுவதோடு தடுமாறும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக கார்கள், வேன்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு, எதிரே வாகனங்கள் வரும்போது அந்த விளக்குகளை ஒளி அளவைக் குறைக்காமல் செல்கின்றனர். அதிலும் கிராமப் புறங்களில் உள்ள குறுகிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும் முதியவர்கள், இரவு நேரங்களில் இந்த எல்.இ.டி முகப்பு விளக்குகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, சிங்கம்புணரி நகரில் விபத்துகளை தவிர்க்க காவல்துறையினர் இரவு நேரங்களில் சோதனையில் ஈடுபட்டு, வாகனம் உற்பத்தி செய்யப்படும் போதே பொருத்தப்படும் விளக்குகளை தவிர்த்து, கூடுதலாக எல்.இ.டி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும் வாகனங்களைப் பிடித்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– பாரூக்.