திருக்களாப்பட்டியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும்விழா!
அமைச்சர் பங்கேற்பு!
தொழிலதிபரும், திரைப்படத் தயாரிப்பாளருமான துவார் சந்திரசேகர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயின்று வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பல லட்சம் செலவில் கல்வி உபகரணங்களான புத்தகம், நோட்டுகள், எழுதுபொருட்கள், கணித உபகரணப் பெட்டி போன்றவற்றை தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் நேற்று திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை உரையாற்றிய போது, பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இந்தக் கல்வியாண்டிலேயே திருக்களாப்பட்டி உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஆவன செய்யப்படுமென கூறினார். அதன் பின்பு தொழிலதிபர் துவார் சந்திரசேகர் தந்திருந்த கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய தொழிலதிபர் துவார் சந்திரசேகர், தம் சொந்த செலவில் நமக்குநாமே திட்டம் மூலம் மாணவர்களுக்கான கூடுதல் கழிவறை கட்டிடவசதியை உடனே கட்டித்தருவதாகக் கூறினார். மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டியில் பரிசுபெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நினைவுப் பரிசும், துவார் சந்திரசேகர் ரொக்கப்பரிசும் வழங்கிப் பாராட்டினார்கள்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்கினார்.
திருப்பத்தூர் ஒன்றியப்பெருந்தலைவர் சண்முகவடிவேல், திருப்பத்தூர் பேரூராட்சி மாமன்றத்தலைவர் கோகிலராணி, விராமதி மாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவி சாந்தி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி K.பத்மா முதலானோர் கலந்து கொண்டனர். உதவித் தலைமையாசிரியர் சேவுகமூர்த்தி நன்றியுரை வழங்கினார். ஆசிரியர்கள் ஜெயராம், சபரிச்செல்வம், செல்வானந்தம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாணவர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.