தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் இரசாயன கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 மீன் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோமஸ்புரம் பகுதியிலுள்ள உப்பாற்று ஓடையில் இரசாயனக் கழிவுநீர் கலக்கப்பட்டு இளஞ்சிவப்பு நிறமாக மாறியது. இரசாயனக் கழிவுநீர் கடலில் கலப்பதால் கடல்நீர் உயிரினங்களும், அதனை உண்ணும் அனைத்து மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், நீரின் நிறம் மாறியிருக்கும் உப்பாற்று ஓடையை கனிமொழி எம்பி, மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில், உப்பாற்று ஓடையில் இரசாயன கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 மீன் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்,
-முத்தரசு கோபி.