தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் 2 அடி உயர தங்கவேலை உண்டியலில் காணிக்கையாக வழங்கினார்.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த ‘வேல்’ காணிக்கையை சீமான் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவரான முருகனை வழிபட்டார். பின்னர் கோவில் உற்சாகத்தில் உள்ள சண்முகர், பெருமாள், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கி சுவாமி தரிசனம் செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சீமான்:
ஜல்லிக்கட்டு குறித்த நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை அனைத்து தமிழர்களும் கொண்டாட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் வெல்வதை மட்டுமே இலக்காக கொண்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
தமிழகத்தில் கல்வி பயில்வதற்காக நகைகளை அடமானம் வைத்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் நிதி உதவி. இதுதான் திராவிட மாடல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அ. தி. மு. க. ஆட்சி காலத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதனால் அவர்கள் தப்பித்துக்கொண்டனர். கள்ளச்சாராயம், விஷச்சாராயம் நேற்று காய்ச்சி இன்று குடித்த நிகழ்வு அல்ல. பல ஆண்டுகளாக இது நடைபெற்று வருகிறது. அரசு விற்றால் சாராயம், தனியார் விற்றால் கள்ளச்சாராயமா?. தமிழகத்தில் மதுவை ஒழிக்க நினைப்பவர்கள் வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியம். இவ்வாறு அவர் கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.