ஓசியில் ஜூஸ், பிரட் ஆம்லெட் கேட்டு அடாவடி! பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம்!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் பிரட் ஆம்லெட், சாக்லேட், ஜூஸ் போன்றவற்றை ஓசியில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவரும், அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட பெண் காவலர்கள் நான்கு பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஜூஸ் கடைக்கு சென்றுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அங்கு கடையில் இருந்த விற்பனையாளர்களிடம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவலர்களும் ஜூஸ், பிரட் ஆம்லெட், சாக்லேட், குடிநீர் கேன்கள் போன்றவற்றை ஓசியில் கேட்டு, தகராறில் ஈடுபட்டதோடு கடை உரிமத்தையும் ரத்து செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணையில் ஜூஸ் கடையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட நான்கு காவலர்களும் பொருட்கள் கேட்டு ரகளையில் ஈடுபட்டது உறுதியானது.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஜெயமாலா உள்ளிட்ட நான்கு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் மீது முன்பிருந்தே தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் தற்போது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஓசியில் ஜூஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட காரணத்தால் நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– சிவகங்கை மாவட்ட
தலைமை நிருபர் பாரூக்.