கன்னியாகுமாரி மாவட்டம் காவல்துறையின் சார்பில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு HAWK EYE என்று சொல்லக்கூடிய வாகனத்தில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் மொத்தம் ஐந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு திசையும் நோக்கி இருக்கும் நான்கு கேமராக்கள் 100 மீட்டர் வரைக்கும் உள்ள பகுதியில் நடப்பவற்றை துல்லியமாக படம்பிடித்து பதிவு செய்யும் ஆற்றல் உடையது. மேலும் உள்ள ஒரு 360 டிகிரி கேமரா வாகனத்தின் உள்ளிருந்து இயக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.
அனைத்து கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் மறு விசாரணைக்கு உதவிடும் வகையில் சேமிக்கப்படுகிறது. அனைத்து கேமரா பதிவுகளையும் வாகனத்தின் உள்ளிருந்தே இயக்கி கண்காணிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாகனமானது முக்கிய பிரமுகர்களின் வருகையின் போதும் மாவட்டத்தில் முக்கியமான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடத்திலும், வடசேரி அண்ணா போன்ற பேருந்து நிலையங்கள் மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இந்த வாகனத்தின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும் LED திரையில் மாவட்ட சமூக ஊடக குழு (Social Media) மற்றும் சைபர் கிரைம் போலீசாரால் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு படங்கள் மற்றும் காவல் துறையினரால் பொதுமக்களுக்கு கூறப்படும் அறிவிப்புகளும் ஒளிபரப்பும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த HAWK EYE வாகனமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் இயங்குகிறது. நேற்று 24-04-2024 இந்த வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வாகனத்தில் உள்ள குறைகளை கேட்டறிந்த அவர், வாகனம் இயக்குவது, அதனை பராமரிப்பது, மேலும் கண்காணிப்பு பணி பற்றிய சில அறிவுறுத்தல்களை காவல் ஆளுநர்களுக்கு வழங்கினார்.
-P.இந்திரன், கன்னியாகுமாரி.