தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கார் விபத்தில் தினபூமி நாளிதழ் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.
மதுரை கே.கே. நகரைச் சேர்ந்தவர் மணிமாறன் (65). தினபூமி நாளிதழ் உரிமையாளர். இவரது மகன் சதீஷ் (45). இவர்கள் இருவரும் இன்று திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில் சென்றனர். காரை சதீஷ் ஓட்டினார். தேசிய நான்கு வழிச் சாலையில் நாலாட்டின்புதூர் மேம்பாலத்தை கடந்து வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்று, அவ்வழியே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.
இவ்விபத்தில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து நாலாட்டின்புதூர் போலீசார், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிமாறன் உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லேசான காயமடைந்த கண்டேயனர் லாரி ஓட்டுநர் தேரையூர் தாலுகா சாட்டூரைச் சேர்ந்த அசோக்குமார் (28) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.