பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்த நபர்! கம்பி எண்ண வைத்த கயத்தாறு காவல்துறை!

தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும், குழந்தைகள் பங்கேற்கும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் தந்தை பெரியாரின் கருத்துகளை அவரைப்போலவே வேடமிட்டு நடித்துக் காட்டியிருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மூலம் வெளிவந்த பெரியாரின் கருத்துகள் அனைத்தும் சமூக வலைதளங்கள் வாயிலாக லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்தது. இதனையடுத்து அந்தச் சிறார்கள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பாராட்டுகளையும் பெற்றிருந்தார்கள்.

இப்படியிருக்கையில், கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபு என்பவர் சமூக வலைதளத்தில் பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையிலும், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவிட்டதால் அவரை கயத்தாறு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டையாபுரம் வளைவு ரோட்டை சேர்ந்தவர் குருசாமியின் மகன் வெங்கடேஷ்குமார் பாபு (36). கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுனராகப் பணிபுரிந்து வருகிறார்.

அவரது பதிவுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில், பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும், தலைவர்களை அவமதிக்கும் வகையிலும், சமூகத்திற்கு எதிராக கலகத்தை துண்டும் வகையில் வாசகங்கள் பதிவிட்டு வெளியிட்டதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் திமுக நகர செயலாளர் சுரேஷ்கண்ணன் கயத்தாறு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதனையடுத்து கயத்தாறு காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ்குமார் பாபுவை கைது செய்து, கோவில்பட்டி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts