கோவை -சத்தி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் விரிவாக்கம் செய்வதற்கான சர்வே பணிகள் நேற்று நடந்தன.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக மட்டுமே உள்ளது. இதனால் கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி ஆகிய ஊர்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக முகூர்த்த நாட்களில், காலை, மாலை நேரங்களில் அன்னுார் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.
கோவை- சத்தி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். அன்னுார் நகரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். அன்னுார், கோவில்பாளையம் மற்றும் புளியம்பட்டியில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என அன்னுார் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், 25 ஆண்டுகளாக போராடி வருகின்றனர், இதற்காக மூன்று முறை விரிவான சர்வே எடுக்கப்பட்டும் பணிகள் இன்னும் துவங்கவில்லை.
இந்நிலையில், சரவணம்பட்டியில் இருந்து, கோவில்பாளையம், அன்னுார் வழியாக ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி வரை சாலையின் இரு புறமும் தலா 1.5 மீட்டர் (5 அடி) அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ‘டெண்டர்’ விடப்பட்டுள்ளது.
சரவணம்பட்டியில் இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் அன்னுாரில் இருபுறமும் சாலை அகலப்படுத்த சர்வே எடுக்கும் பணி நேற்று நடந்தது. இப்பணியால் அன்னுார் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இதுகுறித்து அன்னுார் மக்கள் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஐந்து அடி அகலப்படுத்தும் போது, மின் கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் ஆகியவற்றை சாலைக்கு வெளிப்புறம் மாற்றி அமைக்க வேண்டும், கடைகள், நிறுவனங்களின் விளம்பர பலகைகள் சாலையில் வைக்காமல் முழுமையாக சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகன போக்குவரத்து உள்ள நிலையில், தற்போது இரு புறமும் 1.5 மீட்டர் மட்டும் அகலப்படுத்துவது போதுமானதாக இல்லை. நான்கு வழிச்சாலையாக மாற்றினால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.