பொள்ளாச்சி அருகே காரை வழிமறித்து யானை பள்ளத்தில் தள்ளியதில் காரை ஓட்டி வந்த மின்வாரிய ஆம்புலன்ஸ் டிரைவர் படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் மற்றும் நவமலை பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பலர் வசிக்கின்றனர். நவமலைக்கு செல்வோர் யானையின் நடமாட்டத்தை அறிந்து மிகவும் எச்சரிக்கையுடன் சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக நவமலை வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம் கூட்டமாக ஆழியார் அணையை நோக்கி வந்துள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு நவமலைரோட்டில் 2 கார்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. முதலில் வந்த காரை நவமலை மின்வாரிய ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் சரவணன் (49) என்பவர் ஓட்டி வந்தார். 2வது காரில் ஆம்புலன்ஸ் டிரைவரின் உறவினர் வந்துள்ளார். இரண்டு காரையும் ரோட்டில் உலா வந்த ஒற்றை யானை வழிமறித்தது. இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஓட்டி வந்த காரை பள்ளத்தில் தள்ளியது. இதில் கார் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. மற்றொரு காரை யானை பள்ளத்தில் தள்ளியது. ஆனால் கார் ஓரமாக நின்றது. இதனால் அதிலிருந்த அவரது உறவினர் தப்பினார்.
பள்ளத்தில் கார் உருண்டு விழுந்ததில் காரை ஓட்டி வந்த சரவணன்(49) என்பவர், இடிபாட்டில் சிக்கி படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்தவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டியடித்தனர். பின்னர் காரில் படுகாயத்துடன் கிடந்த சரவணனை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.