பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் நெல்லை களக்காடு அருகே என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நீராவி முருகன் மீது 80க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன்(45),பிரபல ரவுடி. இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
தூத்துக்குடியில் மனைவி, குடும்பத்துடன் வசித்து வந்த முருகனுக்கும், பிரபல தாதா ஒயின்ஸ் சங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒயின்ஸ் சங்கருக்காக பல காரியங்களை முருகன் செய்துள்ளான். அவனுடைய பெயரை தன்னுடைய மார்பில் முருகன் பச்சை குத்தி இருக்கிறான். இவனை ரவுடிகள் வட்டாரத்தில் அவனுடைய ஊர் பெயரை அடைமொழியாக வைத்து அழைத்ததால் ‘நீராவி முருகன்’ என்று பிரபலமானான்.
இவரை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் களக்காடு அருகே நீராவி முருகன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் நீராவி முருகனை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது தப்பி ஒட முயன்ற நீராவி முருகன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி என்று இருந்த நீராவி முருகன், 98ல் தூத்துக்குடி பஸ் நிலையம் அருகே செல்வராஜ் கொலை வழக்கில் காவல்துறையினர் சேர்த்தனர். திருப்பூரில் கொள்ளையடித்த நகை, பணத்தை பங்குபிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளியை கொன்றான். ஆலடி அருணா கொலையில் கூலிப்படையாக மாறினான். இதனால் காவல்துறையினர், நீராவி முருகனை இரண்டு முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நீராவி முருகன் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கைவரிசையை காட்டத் தொடங்கினான். ஆனால் அவனை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. நீராவி முருகன் மீது 84 வழக்குகள் இருப்பதாக காவல்துறையில் கணக்கு உள்ளது. ஆனால் கணக்கில் வராத பல புகார்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நீராவி முருகனால் வழிப்பறி செய்யப்பட்டவர்களில் சிலர் காவல்துறையில் புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர். அந்தளவுக்கு அவன் அவர்களை வழிப்பறி செய்யும் போது மிரட்டி இருக்கிறான்.
உல்லாச வாழ்க்கைக்காகவே நீராவி முருகன் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுப்பட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான். கடந்த 2019ஆம் ஆண்டு நீராவி முருகன் கும்பல் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த கும்பலை பிடிக்க போலீசார் முயற்சி செய்து வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது நீராவிமுருகன் உள்ளிட்ட கும்பல் காரில் ஏறி தப்ப முயன்றனர். அவர்கள் சென்ற கார் அருகிலுள்ள ரோட்டோர சாக்கடை கால்வாய்க்குள் சிக்கியது. அந்த காரை போலீசார் சுற்றி வளைத்தபோது, நீராவி முருகன் அரிவாளால் போலீஸ் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொல்ல முயன்றார். சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் ரவுடிகள் சிலர் தப்பி ஓடிவிட்டனர். நீராவிமுருகன், கார் டிரைவர் மரிய ரகுநாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஜாமீனில் வெளிவந்த நீராவி முருகன் தலைமறைவானார். இவரை பல்வேறு மாதங்களாக தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் பதுங்கியிருப்பதாக திண்டுக்கல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இதனையடுத்து, அவரை கைது செய்ய திண்டுக்கல் தனிப்படை போலீசார் முயற்சித்தபோது காவலர்களை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீராவி முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் திட்டமிட்டு நடைபெறவில்லை. தற்காப்புக்காக நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில் முருகன்,சென்னை.