காவல் ஆய்வாளர் கஞ்சா கடத்தல் கும்பலோடு பிரியாணி விருந்து சாப்பிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நாகையை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி வீட்டில் காலையில் சோதனை நடத்திய நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி, மாலையில் அதே கஞ்சா கடத்தல் கும்பலோடு அமர்ந்து சொகுசு ஹோட்டலில் பிரியாணி விருந்து சாப்பிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.
இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தும் குற்ற செயல்கள் நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் கஞ்சா கடத்தல் கும்பலின் தலைவன் சிலம்பரசன் வீட்டில் நாகை நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமயிலான சிறப்பு தனிப்படை போலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சிலம்பரசன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது குறித்த சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரி சிலம்பரசன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் என 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதானவர்களின் செல்போனை ஆய்வு செய்தபோது தற்போதைய காவல் ஆய்வாளர் பெரியசாமியோடு அவர்கள் அடிக்கடி பேசிய தெரியவந்துள்ளது. மேலும், கஞ்சா வியாபாரி சிலம்பரசனுடன் ஆய்வாளர் பெரியசாமி சொகுசு விடுதி ஒன்றில் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவது போன்ற புகைப்படமும் இருந்தது. ஆனால், இந்த புகைப்படம் ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று பெரியசாமி விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், கஞ்சா கடத்தல் கும்பலோடு காவலர் சீருடையில் பிரியாணி சாப்பிட்ட ஆய்வாளர் பெரியசாமியை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
– ராயல் ஹமீது.