கோவை-வாளையாறு இடையே மதுக்கரை, போத்தனூர் வழித்தடங்களில் ஏ மற்றும் பி என் 2 தண்டவாளங்கள் உள்ளன.
இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி ரெயில் மோதியதில் 3 காட்டு யானைகள் பரிதாபமாக இறந்தன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் காட்டு யானைகள் இறந்தது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சதீஷ்குமார், சுப்பிரமணியன், இளந்திரையன் ஆகியோர் நேற்று கோவை வந்தனர். இவர்கள் போத்தனூர், முதல் மதுக்கரை வழியாக வாளையாறு வரை ஒரு ரெயில் என்ஜினில் பயணம் செய்து அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் காட்டு யானைகள் ரெயிலில் அடிபட்டு இறந்த இடங்களில் அந்த சம்பவங்கள் குறித்து லோகோ பைலட் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், நீதிபதிகளிடம் விளக்கினர்.
இந்த ஆய்வின் போது நீதிபதிகள், ரெயில்வே தண்டவாள பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சோலார் விளக்குகள், வாளையாறு பகுதியில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக தேனீயின் சத்தம் போன்று ஒலி எழுப்பும் அலாரம் கருவியை நேரில் பார்வையிட்டு அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
மேலும் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடப்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் புதர்களை அகற்றி சரிவுகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ள இடங்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து வாளையாறு ரெயில் நிலையத்தில் வைத்து நீதிபதிகள், பாலக்காடு கோட்ட ரெயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரகுமான், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோருடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர். அப்போது காட்டு யானைகளை பாதுகாக்க வெளிநாட்டில் இருந்து யானை நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை பெற்று செயல்படும்படி அறிவுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது!!
நாளையவரலாறு செய்திக்காக
-ஹனீப்கோவை.