கோவை:தார் ரோட்டில் குழிகளை செப்பனிட, ஒரு ‘வாட்ஸ் ஆப்’ எண்ணை, மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் ஏரியாவில் உள்ள குழிகளை படம் எடுத்து, விபரங்களுடன் இந்த எண்ணுக்கு அனுப்பலாம். கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில், பயணிக்கவே லாயக்கற்ற ரோடுகள், தற்போது தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
ரோட்டின் அகலம் உள்ளிட்ட அளவீடுகள் சரியாக இருப்பதுடன், தரமான ரோடுகளை அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இரவு, அதிகாலை என மாநகராட்சி உயர் அதிகாரிகள் திடீர் ‘விசிட்’ செய்து, ரோட்டின் தரத்தை உரிய உபகரணங்கள் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், விளாங்குறிச்சி ரோடு உட்பட பல்வேறு மோசமான ரோடுகள் விமோசனத்துக்காக காத்திருக்கின்றன.
இச்சூழலில், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தார் ரோடுகளில் ஏற்பட்டுள்ள குழிகளை செப்பனிட, 81476 84653 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்ணை, மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த எண்ணுக்கு, சேதமடைந்த பகுதியின் புகைப்படம் மற்றும் இருப்பிடத்தை, பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம். மாநகராட்சியுடன் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் இணைந்து இப்பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
அந்நிறுவனத்தின் மேலாளர் ஜெயந்த் மல்லிக் கூறுகையில், ”ரோடுகளில் உள்ள குழிகளை செப்பனிட, ‘கோல்டு மிக்ஸ்’ கலவை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, வெயில், மழை என எந்த சீதோஷ்ணத்திலும் எளிதில் ‘செட்’ ஆகும் கற்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு தராத ‘எமல்சன்’ கலவை சேர்க்கப்படுகிறது. புகார் பெறப்படும் இடங்களுக்கு சென்று உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் பரீட்சார்த்த அடிப்படையில் இப்பணிகளை மேற்கொள்கிறது. இதனால், குறிப்பாக மழை காலங்களில் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்படும். திட்டத்தின் வெற்றியை பொறுத்து, பணிகளுக்கு நீட்டிப்பு வழங்க பரிசீலிக்கப்படும்’ என்றார்.
கோவை:தார் ரோட்டில் குழிகளை செப்பனிட, ஒரு ‘வாட்ஸ் ஆப்’ எண்ணை, மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்கள் ஏரியாவில் உள்ள குழிகளை படம் எடுத்து, விபரங்களுடன் இந்த எண்ணுக்கு 8147684653 அனுப்பவும்.
-சுரேந்தர்.