சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், ஏரியூர் உலகினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவரும், திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கலைக் கல்லூரி மாணவியுமான ஐஸ்வர்யா என்பவர், ஏரியூர் அருகே உள்ள பொட்டகுண்டு கண்மாயில் முதுமக்கள் தாழிகள் உள்ளதாக தனது கல்லூரியின் வரலாற்றுப் பிரிவு பேராசிரியர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கலைக் கல்லூரியின் வரலாற்றுப் பிரிவு பேராசிரியர்கள் வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன் மற்றும் மாணவ மாணவிகள் அடங்கிய குழுவினர் இன்று காலை பொட்டகுண்டு கண்மாயில் ஆய்வு செய்த போது, பெரிய வடிவிலான முதுமக்கள் தாழி ஒன்றும், பத்துக்கும் மேற்பட்ட சிறிய தாழிகளும் கண்டறியப்பட்டுள்ள தகவலறிந்து,
இன்று காலையே அந்த இடத்தை சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல் செல்வி ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் எஸ்.எஸ்.கோட்டை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், இது தொடர்பாக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்து ஆய்வு நடத்தப்படும் பட்சத்தில், கீழடி போன்று மேலும் பல வரலாற்றுச் சான்றுகள் கண்டறியப்படலாம் என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
– பாரூக், சிவகங்கை.