சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை முற்பகலில் நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள்.
மேலும் 4 குழந்தைகள் உள்பட 25 பேர் படுகாயமடைந்து காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேல் சிகிச்சைக்காக ஒரு குழந்தை, தாய் மற்றும் ஆண் ஒருவர் என 3 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், இளையாங்குடி அருகே பூச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள ஒரு உறவினர் இல்ல வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுற்றுலா வாகனம் ஒன்றில் வந்தனர்.
வேன் காரைக்குடி – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பத்திரபதிவு அலுவலகம் அருகே வந்துகொண்டிருந்தபோது தீயணைப்பு நிலையம் எதிரே சாலையோரம் நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணிமேகலை (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தவப்பிரியா (22), பாப்பாத்தி (60) ஆகிய இருவரும் சிசிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
4 குழந்தைகள் உள்பட 25 பேர் பலத்த காயத்துடன் காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு குழந்தை, தாய் மற்றும் ஆண் ஒருவர் என மூன்றுபேர் கூடுதல் சிசிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி, குன்றக்குடி காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து குன்றக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
– ராயல் ஹமீது.