திருச்செந்தூர் டூ கோவை… பயணிகளை அலறவிட்ட பயங்கர தீ – அடுத்து நடந்த ஷாக்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது உடன்குடி. இங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவைக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.
பயணத்தின் தொடக்கம் சுமூகமாய் இருந்தது. எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பயணிகளும் மிகுந்த நம்பிக்கையுடன் பயணத்தை தொடர்ந்தனர். இரவு நேரம் என்பதால் அனைவரும் உறங்கத் தொடங்கினர்.
இந்நிலையில் தூத்துக்குடி டோல்கேட் பகுதியை கடந்து பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தில் தீப்பற்றிக் கொண்டது. இதனை அறிந்த பயணிகள் உடனே சுதாரித்துக் கொண்டனர். ஓட்டுநருக்கு விஷயத்தை கூறி பேருந்தை சாலையோரம் நிறுத்தினர்.
பின்னர் அலறி அடித்துக் கொண்டு அவசர அவசரமாய் அனைவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். அதற்குள் தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதுபற்றி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுவதுமாக தீக்கு இரையானது.
இந்த விபத்தை அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பேருந்து தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்துகளில் ஏறி தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர். தக்க சமயத்தில் பேருந்தில் இருந்து வெளியேறியதால் அனைவரும் உயிர் தப்பினர். இல்லையெனில் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன் தூத்துக்குடி.