தூத்துக்குடி, கோவில்பட்டிக்கு அடுத்தப்படியாக அதிக வருவாயை ஈட்டி தரும் கடம்பூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்லுமா? பயணிகள் எதிர்பார்ப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கடம்பூர் பேரூராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், கடம்பூர் சுற்று வட்டாரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் ஒரு காலத்தில் பருத்தி அமோகமாக விளைந்ததால் அதிக பருத்தி ஆலைகளும் அமைந்திருந்தன. 1980-95 காலகட்டத்தில் இந்த பகுதி மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை பருத்தி, உரத்தொழிற்சாலை, தீப்பெட்டி தொழில் வழங்கியது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்யும் ஒரு தொழில் நகரமாக இருந்தது. ஆனால் இன்று அனைத்து தொழில்களும் முடங்கி, மக்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். இப்பகுதி மக்கள் பயணத்திற்கு ரயிலை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கடந்த 1990ல் அனைத்து ரயில்களும் கடம்பூரில் நின்று சென்றன. பிறகு சில ரயில்களின் நிறுத்தத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.
கடம்பூரில் நின்று சென்ற அனந்தபுரி, மைசூர் எக்ஸ்பிரஸ், மதுரை-கொல்லம் ரயில்கள் நிற்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பகலில் சென்னை செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸ் நிற்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். இங்குள்ள 2வது நடைமேடையில் இறங்கி முதல் நடைமேடைக்கு வர படிக்கட்டு மேம்பாலம் அமைக்க வேண்டும். பழைய ரயில்வேகேட் அமைந்திருந்த பாதையை அடைத்துவிட்டு புதிய சுரங்க பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த இடத்தின் அருகில் மழை நீரோடை, குளம் உள்ளதால் நீர்கசிவு ஏற்பட்டு சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கும். இதனால் சுரங்க பாலம் அமைக்கும் பணியினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கடம்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்படும் ரயில்வே பாலம், இணைப்பு சாலை முழுவதும் ரயில்வே இடத்தில் வருகிறது. இதை பராமரிக்க ரயில்வே துறைதான் நிதி ஒதுக்க வேண்டும். மேலும் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் இதுவரை தண்ணீர் வரவில்லை. அதை முறையாக பராமரித்து பயணிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளை ஏற்று கடம்பூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.