கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த வெள்ளாளபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜய்ராதா (வயது 28) என்பவர், தனது மனைவி ருவிசும்பி ராதாவுடன் (26) தங்கியிருந்து கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது மூன்று வயது குழந்தை நெர்சன் ராதா விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாரத விதமாக கோழிக்கழிவுகளை கொட்டும் குழிக்குள் விழுந்ததாக தெரிகிறது.
இதற்கிடையில் வேலை முடிந்து வந்த அஜய்ராதா தனது குழந்தையை தேடினார். அப்போது குழிக்குள் குழந்தை பேச்சு மூச்சு இன்றி கிடந்தது.அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக குழந்தையை தூக்கி மேலே கொண்டுவந்தார். தொடர்ந்து அவரை பரிசோதித்தபோது உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த நெகமம் போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அருண்குமார், கிணத்துக்கிடவு.