சிவகங்கை மாவட்டம், ஜெயங்கொண்ட நிலையைச் சேர்ந்தவர் கனகரத்தினம் மனைவி ஜோதி (வயது 50). இவர் சிங்கம்புணரி – திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம்மில் நேற்று பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அவருக்கு பணம் எடுப்பதில் உதவுவதாக அங்கிருந்த 2 வாலிபர்கள் கூறியுள்ளனர். அப்போது குளறுபடி செய்து ஜோதியின் ஏ.டி.எம். கார்டை அவர்கள் வைத்துக் கொண்டு, மற்றொரு போலியான ஏடிஎம் கார்டை ஜோதியிடம் ஏமாற்றி கொடுத்தனுப்பியுள்ளனர்.
அதன்பின்னர் ஜோதியின் ஏ.டி.எம். கார்டைப் பயன்படுத்தி அவரது கணக்கிலிருந்து ₹.20 ஆயிரத்தை எடுத்துள்ளனர். பணம் எடுத்தது பற்றி ஜோதியின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த ஜோதி, உடனடியாக சிங்கம்புணரி காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் சிங்கம்புணரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.