பங்குனி உத்திர தேர்த்திருவிழாவையொட்டி பேரூர் பட்டீசுவரர் கோவிலில் கொடியேற்றப்பட்டது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேர்த்திரு விழா நேற்று காலை 6.30 மணிக்கு பட்டி விநாயகர் கோவிலில் இருந்து, புற்றுமண் எடுத்து வருதலுடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து, யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, நவதானியங்களை வைத்து முளைப்பாலிகை இடுதல், 8 மணிக்கு காலசந்தி பூஜை, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து, வேதம், ஆகமம், திருப்பாராயணம் பாடப் பட்டு, கொடியேற்று விழா நடந்தது. பின்னர், மகா தீபாராதனை, அஷ்ட பலிபீடங்களுக்கு காப்புக்கட்டுதல், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, இரவு 8 மணிக்கு மேல் சந்திரசேகரர், சவுந்தரவல்லி புறப்பாடு, திருவீதி உலா நடைபெற்றது.
வருகிற 1-ந் தேதி திருக்கல்யாணம், 2-ந் தேதி தேரோட்டம், 4-ந் தேதி தெப்ப தேரோட்டம், 5-ந் தேதி பங்குனி உத்திர தரிசனம் நடக்கிறது. இதில், பேரூர் கோவில் உதவி ஆணையர் விமலா, பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, துணைத்தலைவர் நாராயணன் மற்றும் திருப்பணி ஊழியர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.