தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர். கணேஷ், எம்.ஆர். சுவாமிநாதன். இவர்கள் இருவரும் நிதி நிறுவனம், க்ரிஷ் பால் பண்ணை உள்ளிட்ட தொழில்களை நடத்தி வந்தனர். சொந்த ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால் ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டனர்.
இவர்கள் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இருமடங்காக பணம் திருப்பித் தரப்படும் என கூறியதால், அதை நம்பி ஏராளமானோர் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு உரிய தொகை திருப்பி கொடுக்கப்படவில்லை.
இதனிடையே முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை திரும்ப தருமாறு ஹெலிகாப்டர் சகோதரர்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை. இதையடுத்து கும்பகோணத்தை சேர்ந்த ரகுபிரசாத் என்பவர் ரூ.2½ கோடியையும், மற்றொருவர் ரூ.38 லட்சத்தையும் கணேஷ், சுவாமிநாதன் தர மறுப்பதாக தஞ்சை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சகோதரர்களில் ஒருவரான கணேஷ் கோவையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். தனிப்பிரிவு துணை ஆய்வாளர் கண்ணன் தனியார் விடுதிக்கு சென்று அங்கிருந்த கணேசிடம், உங்கள் மீதான புகார் தொடர்பாக விசாரிக்க வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் மறுநாள் தனிப்பிரிவு ஆய்வாளர் சோமசுந்தரம், துணை ஆய்வாளர் கண்ணன் இருவரும் அதே விடுதியில் கணேசை சந்தித்து பேசினர்.
அப்போது உங்கள் மீதான 2 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.1 கோடியும், இனிமேல் வரக்கூடிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடியும் என மொத்தம் ரூ.6 கோடியை காவல் கண்காணிப்பாளர் கேட்டதாக கணேசிடம் தெரிவித்தனர்.
மேலும் முதல் தவணையாக ரூ.10 லட்சம் காவல் கண்காணிப்பாளர் கேட்பதாக காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். அப்போது தனது வங்கி கணக்கில் ரூ.6 லட்சம் மட்டுமே இருக்கிறது என்றும் பணத்தை செலுத்த 5 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கணேஷ் கேட்டுள்ளார்.. உடனே அறையை விட்டு வெளியே சென்ற சோமசுந்தரம் 10 நிமிடம் கழித்து மீண்டும் அறைக்கு வந்து அந்த ரூ.10 லட்சத்தை 2 தவணையாக செலுத்த வேண்டும் என கணேசிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பணம் வரும் வரை இங்கேயே இருக்கும்படி துணை ஆய்வாளர் கண்ணனிடம் கூறிவிட்டு ஆய்வாளர் சோமசுந்தரம் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதையடுத்து கணேஷ் தங்கியிருந்த லாட்ஜில் 2 காவலர்களை கண்காணிக்க கூறிவிட்டு துணை ஆய்வாளர் கண்ணன் ஊட்டிக்கு சென்று விட்டார். இரண்டு தவணைகளாக ரூ.10 லட்சம் பெற்றனர் மறுநாள் 19-ந் தேதி கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்தி வந்த பால்பண்ணை மேலாளர் ஸ்ரீகாந்த், தஞ்சைக்கு சென்றார்.
அங்கு சென்ற அவரிடம் வல்லம் நம்பர்-1 சாலையில் உள்ள காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் அருகே வைத்து ரூ.5 லட்சத்தை இடைத்தரகர் ஒருவர் மூலமாக சோமசுந்தரம் பெற்றுக்கொண்டு உள்ளார். பணம் பெற்றுக்கொண்ட விவரத்தை அவர், வாட்ஸ்-அப் மூலம் கண்ணனிடம் கூறினார்.
இதனையடுத்து அவர் மறுநாள்(20-ந் தேதி) கணேசை சந்தித்து பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறி விட்டு கோவையில் இருந்து புறப்பட்டார். பின்னர் 29-ந் தேதி மீதம் உள்ள ரூ.5 லட்சத்தை சோமசுந்தரம், கண்ணன் இருவரும் பெற்றனர்.இந்த நிலையில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் ஒரு பண்ணை வீட்டில் இருந்த கணேஷ், சுவாமிநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி கைது செய்தனர்.
அந்த நேரத்தில் கைதானவர்களிடம் இருந்து காவல்துறை உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது. உடனே அப்போதைய காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், துணை ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த புகாருக்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததையடுத்து தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், துணை ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் மீது தஞ்சை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சோமசுந்தரம், தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் காவல் ஆய்வாளராகவும், கண்ணன், திருவாரூர் தாலுகா துணை ஆய்வாளராகவும் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த தொழிலதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே லஞ்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட இச்சம்பவமானது பொதுமக்கள் காவல்துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது..
– தமிழரசன், மேலூர்.