திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 10 நாட்களாக வைகாசித் திருவிழா நடந்து வருகிறது. அதை முன்னிட்டு அங்கு ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது விடுதலை சிறுத்தை கட்சியின் பேனரை மற்றொரு தரப்பினர் அரிவாளால் கிழித்தெறிந்துள்ளனர். இதுகுறித்து இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக இருதரப்பினரையும் எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நள்ளிரவில் அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, அங்கு வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில் ஒரு கார் உட்பட 34-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமானது. இந்த தாக்குதலை தடுக்க வந்த அந்தப் பகுதியை சேர்ந்த, திருக்குமார், மணிமுத்து, பழனி குமார், செல்வகுமார் ஆகிய 6 பேர் மீது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 6 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே இருதரப்பு மோதலால் திருமோகூர் பகுதியில் பதட்டமான சூழல் உருவானதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒத்தக்கடை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தாக்குதல் தொடர்பாக 24 பேர் மீது ஒத்தக்கடை காவல்துறையினர் ஒன்பது பிரிவுகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் 12 நபர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருமோகூரில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின் போது, குடிபோதையில் சாதிவெறிப் பித்தர்கள் இவ்வாறு ஆதி திராவிடர்களின் குடியிருப்பிற்குள்ளே நுழைந்து கொலை வெறித்தாக்குதலை நடத்துவது வாடிக்கையாக உள்ளது. மணிமுத்து, பழநிக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சாதி ஆதிக்க வெறியாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என தெரிவித்தார். இதனிடையே, தாக்குதல் நடத்திய தரப்பினர் மீது 8 வழக்குகளும், தாக்குதலுக்குள்ளான தரப்பினர் மீது 11 வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இச்சம்பவத்தால், இருதரப்பினரிடையே பதற்றம் நிலவுவதால் திருமோகூர் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
– மேலூர், தமிழரசன்.