தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 10ஆம் தேதி சாக்குப்பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், அந்தப் பெண் சடலத்தை மீட்டு உடற்குறைவுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பெண்ணிற்கு 20 முதல் 25 வயதிற்குள் இருக்கலாம் என தெரிவித்த காவல்துறையினர், முகம் முழுவதும் சிதைந்த நிலையில் இருந்த அப்பெண் யார் என்ற தகவல் தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து கடையநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, கொல்லப்பட்ட இளம்பெண் யார்? அவரை கொன்று வீசியது யார்? என விசாரணை நடத்தி வந்தனர். பெண்ணின் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு காணப்பட்ட நிலையில், கையில் பச்சை குத்தப்பட்டிருந்த எம்.வி என்ற எழுத்தை அடையாளமாக வைத்து தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் காணாமல்போன இளம்பெண் குறித்து புகார் ஏதும் வந்துள்ளதா என விசாரித்தனர்.
இதில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை காவல்நிலையத்தில் வினோதினி(19) என்பவர் மாயமாகியுள்ளதாக புகார் பதிவாகி இருந்தது. இதையடுத்து அம்மாவட்ட காவல்துறையினரை தொடர்பு கொண்டு காணாமல் போன இளம்பெண்ணின் அங்க அடையாளங்கள் குறித்து விசாரித்தனர். இதில் மீட்கப்பட்ட இளம்பெண் பிணம், வினோதினிதான் என்பது உறுதி செய்யப்பட்டது. வினோதினியின் செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து விசாரித்தபோது, வலசையை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டரான மனோரஞ்சித்(22) என்ற வாலிபர் பேசியது தெரிய வந்தது.
கோயம்புத்தூரில் பதுங்கியிருந்த அவரை பிடித்து காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மனோரஞ்சித், வினோதினியை கொலை செய்தது தெரிந்தது. காவல்துறையினர் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “எனக்கும், வினோதினிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தோம் ஆனால் இதை அறிந்த வினோதினியின் பெற்றோர், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகும் வினோதினி என்னுடனான தொடர்பை கைவிடவில்லை. இதனால் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். வினோதினி அவ்வப்போது என்னை சந்திப்பதற்காக வலசை வந்து செல்வார்.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் வினோதினிக்கு மேலும் சில இளைஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி நான் கேட்கவே, “என் மீது நம்பிக்கை இல்லையா?, நான் அப்படி எல்லாம் கிடையாது, உனக்கு நான் உண்மையாக உள்ளேன்’ என்று கூறி சமாதானம் செய்தார். கடந்த 7ஆம் தேதி வினோதினியை ஊருக்கு அழைத்தேன். அவரும் வந்தார். வலசை காட்டுப்பகுதியில் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது வினோதினி, “என்னை நம்பவில்லை என்றால் நீயே என்னை கொன்றுவிடு’ என எதார்த்தமாக கூறினார்.
ஆத்திரத்தில் இருந்த நான், அருகே இருந்த கட்டையை எடுத்து வினோதினியின் தலையில் பலமாகத் தாக்கினேன். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். அதன் பின்பு நண்பர்களான மகாபிரபு, பரத், மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை செல்போனில் அழைத்தேன். அனைவரும் சேர்ந்து வினோதினியின் உடலை சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசினோம்” என அவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து மனோரஞ்சித் மற்றும் அவருடைய நணபர்களும் சக பொக்லைன் ஆபரேட்டர்களுமான அதே ஊரைச் சேர்ந்த மகா பிரபு (22), பரத் (21), கடையநல்லூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை தென்காசி நீதிமன்றத்தில் நீர் நிறுத்திய பின்பு, மனோ ரஞ்சித் உள்ளிட்ட 4 பேரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதலனை நம்பி கட்டிய கணவனை கைவிட்டு வந்த இளம்பெண்ணை, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்து கிணற்றில் வீசிய காதலனின் செயல்,
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– பாரூக்,
சிவகங்கை மாவட்ட
தலைமை நிருபர்.