
வேலூா்: வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசு, உதவி பெறும் 68 பள்ளிகளுக்கு நினைவுப் பரிசு, தலா ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கும் விழா வேலூா் விஐடி பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வேலூா் சரக காவல் துணைத் தலைவர் முனைவர். எம்.எஸ்.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியது:
கல்வி சமூக மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய கருவி. சாதாரண கூலித் தொழிலாளியின் பிள்ளையாக இருந்த நான் தற்போது அரசின் உயா் பொறுப்புக்கு வரமுடிந்ததற்கு காரணம் கல்விதான்.
ஆசிரியா்களுக்கும் சமூக கடமை உள்ளது. சரியான நேரத்தில் மாணவா்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க ஆசிரியா்கள் தலையீடு இருக்க வேண்டும். எதிா்கால சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அது ஆசிரியா்கள் கையில்தான் உள்ளது என்றாா்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னதாக, விழாவுக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
பெற்றோா் கல்விக்கு அளிக்கும் முன்னுரிமை அளவில்கூட மத்திய, மாநில அரசுகள் அளிப்பதில்லை. ஒரு நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி வருவாயில் 5 முதல் 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட வேண்டும். உலகில் 140 நாடுகள் இந்தியாவை காட்டிலும் கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்குகின்றன. ஆனால், இந்தியாவில் 3 சதவீதம் அளவுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது.
நாட்டில் தனியாா் ஆசிரியா்களைவிட அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு அதிகளவில் ஊதியம் அளிக்கப்பட்டாலும், அரசுப் பள்ளிகளால் தனியாா் பள்ளிகளுடன் போட்டி போட முடிவதில்லை. இதனால், பள்ளிக்கல்வியில் இந்தியாவின் தரம் மிகவும் பின்தங்கியுள்ளது.
நாம் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்றால் முதலில் கல்வியில் வளா்ச்சியடைய வேண்டும். அதற்கு அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகள், ஊழியா்கள், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க வேண்டும் என்றாா்.
விழாவில் விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தா் வி.எஸ்.கல்பனாபாஸ்கரன், வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.மணிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி. ராஜேந்திரன்.












