ஒன்றிய அரசின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஜனநாயக விரோத மக்கள் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் விவசாயிகள் மக்கள் என பலரும் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் என 5 இடங்களில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டன.
இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் எழுச்சியுடன் பங்கேற்று ஒன்றிய மோடி அரசின் ஜனநாயக மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் மீதான (GST) யை நீக்க வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 26ம் கோரிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். அதேபோல சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் இடைக்குழு செயலாளர் சந்திரன், ஹெச்.எம்.எஸ் மாவட்ட செயல் தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணை செயலாளர் ரவீந்திரன் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் எழுச்சியுடன் பங்கேற்றனர்.
கோவை மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். இதனால் இப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.