கோவை மாநகரில், சிங்காநல்லூர், ராமநாதபுரம், சரவணம்பட்டி, கணபதி, காந்திபுரம், விமான நிலையம், விளாங்குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
மாநகர் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், பல பகுதிகளில், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதிகளிலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். வீடுகளுக்குள் மழை நீர் புகுவதை தடுக்க முடியாமலும் மழை நீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்நிலையில், சிவனந்தகாலனி முதல் சாய்பாபாகாலனி செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், மழைநீர் தேங்கிய நிலையில் தனியார் பேருந்து மழை நீரில் மூழ்கியது. நல் வாய்ப்பாக பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் மீட்பு துறையினர்
பத்திரமாக மீட்டனர்.
மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கன மழையால், நகரின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. கோவை மாநகர், புறநகர பகுதிகளில் மாலை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தொடர் மழை பெய்தது. கனமழையால் முக்கிய சாலைகள் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மதுரை, தேனி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். அதேபோல கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, தருமபுரி, திருச்சி, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.