ஜவுளி வியாபாரம் செய்த பெண்மணி, அதே தொழிலில் ஈடுபட்டு வந்தவருடன் கள்ளக்காதல் வயப்பட்ட நிலையில் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் சம்பவம் கொலை முயற்சியில் முடிந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் முத்துராமலட்சுமி (வயது 35). இவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில், கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரைப் பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவர் ஊர் ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் ஜவுளி வியாபாரம் செய்தபோது, அவ்வூரைச் சேர்ந்த செல்வம் (வயது 30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. செல்வமும் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து வியாபாரம் பார்க்க தொடங்கியுள்ளனர்.
இப்படியாக, இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்திக் கொண்டு வியாபாரம் செய்து வந்துள்ளனர். அந்த சமயத்தில், முத்து செல்வத்திடம் தன்னை திருமணம் செய்யக்கூறி வற்புறுத்தியிருக்கிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த செல்வம், அவ்வப்போது ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக்கியுள்ளார். சம்பவத்தன்று செல்வம் மதுபோதையில் இருந்த நிலையில், கள்ளக்காதல் ஜோடியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம், வீட்டில் இருந்த திராவகத்தை முத்து இராமலட்சுமியின் முகத்தில் வீசி விட்டு, தப்பிச் சென்றுள்ளார்.
திராவக தாக்குதலால் படுகாயமடைந்த முத்து ராமலட்சுமி வலியால் அலறித்துடிக்க, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின்னர், திருநெல்வேலி பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக திருநெல்வேலி காவல்துறையினரிடம் முத்து ராமலட்சுமி புகாரளித்துள்ளார்.
திராவகம் வீசிய சம்பவம் தேவகோட்டையில் நடந்திருப்பதால் அதுபற்றி சிவகங்கை மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் முத்துராமலட்சுமி வசித்து வந்த வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
திராவக வீச்சு தொடர்பாக முத்துராமலட்சுமியின் கள்ளக்காதலன் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவரை பிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம் இருக்கும் இடத்தை கண்டறிய அவரது செல்போன் மூலம் காவல்துறையினர் துப்புதுலக்கி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– ராயல் ஹமீது.