பொள்ளாச்சி 2026 கோட்டையைத் தக்கவைக்குமா அதிமுக.? முறியடிக்குமா திமுக.? – ஒரு சிறப்பு அலசல்

கொங்கு மண்டலத்தின் இதயமாகக் கருதப்படும் பொள்ளாச்சி தமிழக அரசியலில் எப்போதும் ஒரு ஹாட் சீட் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் மீண்டும் ஒரு பலப்பரீட்சை அரங்கேற உள்ளது. ஒரு புறம் அனுபவம் வாய்ந்த பொள்ளாச்சி வி. ஜெயராமன் (அதிமுக) மறுபுறம் துடிப்பான வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நித்தியானந்தன் (திமுக) இந்த இருவருக்கும் இடையிலான மோதல் வெறும் தொகுதி வெற்றிக்கானது மட்டுமல்ல மண்டல செல்வாக்கை நிரூபிப்பதற்கான யுத்தமாகவும் மாறியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​பொள்ளாச்சி தொகுதி கடந்த 20 ஆண்டுகளாக அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. 2001-ல் தொடங்கி 2021 வரை நடந்த ஐந்து தேர்தல்களில் நான்கு முறை பொள்ளாச்சி ஜெயராமன் இங்கு வெற்றி வாகை சூடியுள்ளார். 2021 தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக அலை வீசியபோதும் ஜெயராமன் 1,725 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த வெற்றி அந்தத் தொகுதியில் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கிற்குச் சான்று.

இந்த முறை களம் மாறியிருக்கிறது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக பெற்ற இமாலய வெற்றி (சுமார் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசம்) ஆளுங்கட்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

திமுக தரப்பில் நித்தியானந்தன் களம் இறக்கப்படுவது ஒரு கணக்கிடப்பட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள சமூக வாக்குகளை ஒருங்கிணைப்பதில் நித்தியானந்தன் ஒரு முக்கிய காரணியாக இருப்பார். மகளிர் உரிமைத் தொகை காலை உணவுத் திட்டம் போன்ற ஆளுங்கட்சியின் திட்டங்கள் அடித்தட்டு மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் திமுகவுக்குப் பெரும் பலம்.

தொகுதி மக்களின் நாடித் துடிப்பு தெரிந்தவர் ஜெயராமன் எந்த நேரத்திலும் மக்களைச் சந்திக்கும் எளிமை அவருக்குக் கூடுதல் பிளஸ். ஐந்து ஆண்டு திமுக ஆட்சியின் மீதான சிறு அதிருப்திகள் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை முன்வைத்து அதிமுக பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் இரு தரப்புக்கும் சில சவால்கள் காத்திருக்கின்றன நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் பிரிக்கும் வாக்குகள் யாருடைய வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி, கடந்த காலங்களில் எழுந்த சில சர்ச்சைகள் இன்னும் மக்களின் நினைவில் இருப்பதால் அதை எதிர்கொள்வது அதிமுகவுக்குச் சவாலாக இருக்கும்,
வேட்பாளர் தேர்வில் இரு கட்சிகளிலும் இருக்கும் உள்ளூர் போட்டி தேர்தல் வேலைகளில் பிரதிபலித்தால் அது முடிவை மாற்றக்கூடும்.

தற்போதைய நிலவரப்படி பொள்ளாச்சி தொகுதி ஒரு நெருப்பு வளையத்திற்குள் இருக்கிறது. அதிமுக தனது பாரம்பரிய கோட்டையைத் தக்கவைக்கப் போராடுகிறது. திமுக அந்தக் கோட்டையைத் தகர்க்கத் துடிக்கிறது. ஜெயராமனின் அனுபவமா.? நித்தியானந்தனின் புதிய வேகமா.? என்பதை பொள்ளாச்சி தொகுதி வாக்காளப் பெருமக்களே தீர்மானிப்பார்கள். எதுவாக இருந்தாலும் பொள்ளாச்சி தேர்தல் முடிவு தமிழக அரசியலில் ஒரு முக்கிய செய்தியைச் சொல்லப்போவது உறுதி.

யார் கையில் பொள்ளாச்சி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *