காஞ்சிபுரத்தில், மாமூல் கொடுக்காததால் வளையல் கடை வைத்திருந்த பெண்ணை, நடுரோட்டில் அதிமுக மகளிர் அணி நகர இணை செயலாளர் சரமாரியாக தாக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை, காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் வளையல் கடை நடத்தி வருபவர் சித்ரா. கணவனால் கைவிடப்பட்டவர். தற்போது சித்ரா, தனது கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.
காஞ்சிபுரம் நகர அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் திலகவதி. இவர், காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கடை வைத்துள்ளவர்களிடம் மாமூல் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இதையொட்டி, வளையல் கடை நடத்தி வரும் சித்ராவிடம், தொடர்ந்து கடை நடத்த வேண்டுமானால், ₹.50 ஆயிரம் தர வேண்டும் என திலகவதி கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் சித்ரா, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் திலகவதி, சில தினங்கள் முன்பு காலை வேளையில் காமாட்சி அம்மன் கோயில் அருகே சென்றார். அப்போது அங்கிருந்த சித்ராவிடம், பணம் கேட்டபோது, அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திலகவதி, கடையில் கூறை அமைக்க வைத்திருந்த பிரம்பை எடுத்து, சித்ராவை நடுரோட்டில் சரமாரியாக தாக்கினார். இந்த காணொலிக் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கிடையில், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சித்ரா புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதிமுக பெண் நிர்வாகி திலகவதியை கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் நேர் நிறுத்தி சிறையிலடைத்தனர். இச்சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
– பாரூக்.