அன்னையர் தினத்தில் 1 ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து அவரது கனவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நிறைவேற்றினார்.
கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி. 85 வயதாகும் இவர், ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கிறார். யாருமே உதவிக்கு இல்லாமல் தனி ஆளாகவே 30 வருஷமாக இந்த இட்லி கடையை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். அதற்கு பிறகுதான் விலையைகூட்டி ஒரு ரூபாய்க்கு விற்று வந்தார். இட்லி சமைக்க கேஸ் அடுப்பு கிடையாது, மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது, சட்னி அரைக்க அடுப்பும், ஆட்டுக்கல்லையும் சுவையும், ஆரோக்கியம் நிறைந்த வகையிலும் இட்லியை தயாரித்து வந்தார்.
ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கினார். இதனைத்தொடர்ந்து பாரத்கேஸ் மாதம் தோறும் இரண்டு சிலிண்டர்களையும், ஹெச்பிகேஸ் ஒரு சிலிண்டரையும் வழங்கப்படுகிறது.
இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் தனக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அவரும் ஆனந்த் மஹிந்திராவிடம் பாட்டியின் கனவு குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து அவர் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
முதல்கட்டமாக , மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப் ஸ்பெசஸ் நிறுவனம் 2. 5 லட்ச ரூபாய் செலவில் 1. 75 சென்ட் நிலம் வாங்கி, கமலாத்தாள் பெயரில் பதிவு செய்து, ஆவணத்தை அவரிடம் வழங்கியுள்ளது.
இதே போல அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல். ஏவும் , முன்னாள் அமைச்சருமான எஸ் பி வேலுமணி , 2. 5 லட்ச ரூபாய் செலவில் 1. 75 சென்ட் இடத்தை இட்லி அம்மாவின் பெயரில் பதிவு செய்துள்ளனர்.
மொத்தம் 3. 5 சென்ட் நிலத்தில் கமலாத்தாள் பாட்டிக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் அந்த நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதியன்று 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு தொடங்கியது.
கடந்த 5 ஆம் தேதி வீடு கட்டி முடிக்கப்பட்டது. மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் வீட்டிற்கான சாவியை வழங்கினார்.
இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தியை அன்னையர் தினத்தில் வழங்கியது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.