பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் உள்ள சமஸ்திபூரில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட தங்கள் மகனின் உடலை ஒப்படைக்க மருத்துவமனை ஊழியர்கள் ₹.50,000 லஞ்சம் கேட்டதால், ஏழை தம்பதியினர் தெருவில் பிச்சை கேட்டு அலையும் கொடூர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் சமஸ்டிபூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் தாக்கூர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மகேஷ் தாகூரின் மகன் இறந்து விட்டதாகவும், உடல் சமஸ்திபூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் தாகூர், தனது மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்றார். தனது மகன் உடலை தரும்படி அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டார். ஆனால், ₹.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உடலைத் தருவோம் என்று ஊழியர்கள் மகேஷ் தாகூரிடம் கூறியுள்ளனர். ஏழையான அவரிடம் பணம் இல்லை. இதனால் வேதனையடைந்த வயதான மகேஷ் தாகூர், மருத்துவமனை ஊழியர்கள் கேட்ட லஞ்ச பணத்துக்காக ஊர் மக்களிடம் பிச்சை எடுக்க முடிவு செய்தார்.
அவர், தனது மனைவியுடன் சமஸ்திபூர் நகர் முழுவதும் வீடு வீடாக சென்று தனது நிலைமையை கூறி பிச்சை கேட்டார். அவருக்கு பலர் பணம் கொடுத்தனர். மகேஷ் தாகூரும், அவரது மனைவியும் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக மகேஷ் தாகூர் கூறும்போது, ‘எனது மகன் உடலை கொடுக்க மருத்துவமனை ஊழியர்கள் ₹50 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. நாங்கள் மிகவும் ஏழைகள். எங்களால் எப்படி ₹50 ஆயிரத்தை கொடுக்க முடியும்? இதனால் பிச்சை எடுத்தோம்’ என்றார்.
அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து பணம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தற்போது உறுதியளித்துள்ளது.
– பாரூக்.