ரயில் பயணிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் பாலக்காடு டவுன் – ஈரோடு இடையே மெமு ரயில் இயக்கப்படுகிறது. இன்று மதியம், 2:40க்கு பாலக்காடு டவுனில் புறப்படும் ரயில் (06818) கஞ்சிக்கோடு, வாளையாறு, எட்டிமடை, மதுக்கரை, போத்தனுார், கோவை, கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லுார், இருகூர், சூலுார், சோமனுார், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டியபாளையம் ஸ்டேஷன்களில் நின்று இரவு, 7:10க்கு ஈரோடு சென்றடையும்.
மறுமார்க்கமாக நாளை (30ம் தேதி) காலை, 7:15 க்கு ஈரோட்டில் புறப்படும் ரயில், 8:15க்கு திருப்பூரையும், 9:35க்கு கோவையையும் கடக்கும். காலை, 11:45க்கு பாலக்காடு டவுன் சென்றடையும். வியாழன் தவிர, வாரத்தின் ஆறு நாட்களும் இந்த ரயில் இயங்கும்.கோவை, திருப்பூர், ஈரோடு மூன்று மாவட்டங்களை இணைக்க ஈரோடு – கோவை, சேலம் – கோவை மெமு ரயில்கள் இயங்கி வருகிறது. இன்று முதல் பாலக்காடு டவுன் – ஈரோடு ரயிலும் இயக்கத்துக்கு வருகிறது.
ஏற்கனவே திருச்சி – பாலக்காடு டவுன் பாசஞ்சர் ரயில் இயங்கி வரும் நிலையில், கேரளாவில் இருந்து ஈரோட்டுக்கு கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மெமு ரயில் அறிவிப்பால், தினசரி ரயில் பயணிகள், சீசன் டிக்கெட்தாரர் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு, 35 ரூபாய் கட்டணம், கோவைக்கும், 35 ரூபாய். ஈரோட்டில் இருந்து தொட்டிபாளையம் துவங்கி கோவை வடக்கு வரை பயணி ஒருவருக்கு கட்டணம், 30 ரூபாய். மதுக்கரை, 40 ரூபாய். எட்டிமடை, வளையாறு 45 ரூபாய், கஞ்சிக்கோடு, பாலக்காடு, 50 ரூபாய். பாலக்காடு டவுன், 55 ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.