சிதம்பரம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக பிரமுகர் மற்றும் இந்து முன்னணி ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. தற்போது பெட்ரோல் குண்டு தயாரித்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையை அடுத்த சம்பந்தம் கிராமத்தில் ஒருவர் பெட்ரோல் குண்டு தயார் செய்வதாக பரங்கிப்பேட்டை காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் லெனின் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது, சம்பந்தம் கிராமம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவரது மகன் தனசிங் (39) என்பவரது வீட்டில் உள்ள வைக்கோல் போரில் ஒரு மஞ்சள் நிற கட்டப்பை மறைத்து வைக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அந்தப் பையை வெளியில் எடுத்து ஆய்வு செய்தபோது அதில் 10 பாலிதீன் கவர்களில் பெட்ரோல் ஊற்றி முடிந்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் இரண்டு பீர் பாட்டில்களும், அவற்றில் நிரப்ப பெட்ரோலும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பெட்ரோல் மற்றும் அங்கிருந்த பொருட்களை போலீசார் கைப்பற்றி பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இதனையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் தனசிங்கிடம் விசாரணை மேற்கொண்டாா். பின்னர் அந்த சம்பவம் குறித்து எரிபொருள் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனசிங்கை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் பலர் கைது செய்யப்படுவர் என போலீசார் தரப்பில் எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
– பாரூக்.