மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்பதால் பொதுமக்கள் அவதி.
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர் குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இணையவழி இணைப்பு முகவரியையும் மின் வாரியம் வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும்போது ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
மின் வாரிய அலுவலகத்தில் போர்ட்டல் மூலம் மின் கட்டணம் செலுத்தப்படும் போது இத்தகைய நிலை ஏற்படவில்லை. ஆனால் தனியாக இணையதளம் மூலமாக மின் கட்டணம் செலுத்தும்போது ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை உள்ளது. அதற்கேற்ப இணையதள பக்கம் வடிவமைக்கப்படவில்லை. அதனால் இன்டர்நெட் மையத்தில் ஆதார் எண்ணை இணைக்காமல் மின் வாரிய இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியவில்லை.
மத்திய அரசு உதய் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. மின் இணைப்பு உடன் ஆதார் எண் இணைத்தால் கேஸ் மானியம், 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் விவசாயிகள், கைத்தறி நெசவுத் தொழில்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவசம் ரத்து செய்யப்படும் என்று அச்சத்தில் பொதுமக்கள் கவலைபடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.