நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி நடக்க இருந்த ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு எம்.ஐ.ரக ஹெலிகாப்டரில் குன்னூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பொழுது நஞ்சப்பசத்திரம் என்னும் இடத்தில் ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், நாயக் குருசேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் சாய் தேஜா, லான்ஸ் நாயக் விவேக் குமார், ஹவில்தார் சத்பால் ராய், விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான், ஸ்குட்ரான் லீடர் குல்தீப் சிங், ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் ராணா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் பிரதீப் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இந்தநிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்து இன்றுடன் (வியாழக்கிழமை) ஓராண்டு ஆகி விட்டது. இதையொட்டி வெலிங்டன் ராணுவ கல்லூரி சார்பில், விபத்து நடந்த இடத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.