சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் வட்டம், தெக்கூர் கிராமத்தில் ராமசாமி மகன் காசி (வயது 90) மற்றும் அவரது மனைவி வள்ளி (80) ஆகிய இருவரும் மேலத்தெருவில் ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர்.
அவர்களது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக வீடு முழுதும் தீ பற்றிக் கொள்ளவே, செய்வதறியாது தவித்த முதியவர்கள் இருவரும் அலறிய நிலையில் அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் உதவி செய்ய வருவதற்கு முன்பாக தீ வேகமாக பற்றி கொண்டது.
இதன் காரணத்தினால் வள்ளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். உடனடியாக தீயணைப்பு துறைக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த நிலையில் இருந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
மேலும், பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலையில் காசியை மீட்ட தீயணைப்புத்துறையினர், அவரை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெற்குப்பை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மருது வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையை சேர்ந்த நிலைய ஆய்வாளர் ஆனந்த் கூறுகையில், ‘மின் கசிவு ஏற்பட்ட உடனேயே விரைவாக வீட்டைவிட்டு வெளியேறி இருந்தால் இருவரும் தீயின் கோரப்பிடியில் இருந்து தப்பித்திருக்கலாம். ஆனால், வயது மூப்பின் காரணமாக இரவு நேரம் என்பதால் செய்வதறியாது தவித்த இருவரும் தீயின் பிடியில் சிக்கிக்கொண்டனர்’ என்று கூறினார். நடந்த தீ விபத்தினால் காசி வசித்து வந்த ஓட்டு வீடு முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளது.
வயது முதிர்ந்த தம்பதிகளில் ஒருவர் தீயில் கருகி பலியானதும், மற்றவர் கருகிய நிலையில் மருத்துவமனைக்குச் சென்றிருப்பதும் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.