சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, வேலைநிமித்தமாகவும், படிப்புக்காகவும் வந்து தங்கியிருப்பவர்கள் பலரும் உணவுக்காக பெரிதும் நம்பியிருப்பது நடுத்தர விலையுள்ள உணவகங்களைத் தான். ஆனால், அண்மைக்காலமாக இங்கும் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி என தொடங்கி நெய்தோசை, வெங்காய தோசை என அனைத்துவகையான உணவுகளுக்கும் குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை உயர்வு, மளிகைப் பொருட்கள் விலை உயர்வு என பல்வேறு காரணங்களால், வேறு வழியின்றி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர். விலை உயர்த்தியும் தங்களால் செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உணவக உரிமையாளர்களின் தரப்பாக இருக்கிறது. இனி உணவகங்களில் சாப்பிடப்போனால், வயிறு நிறைகிறதோ இல்லையோ, மக்களின் பணம் கரைந்துவிடும் என்பது சாமானியர்களின் எண்ணமாக இருக்கிறது.
-கார்த்திகேயன் தண்டையார்பேட்டை.