சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோவில் சுமாா் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா, கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம்,
5ஆம் நாளான நேற்று நடைபெற்றது. இரவு 7 மணியளவில் சேவுகப்பெருமாள் அய்யனார், பூரண – புஷ்கலா தேவியருடன் திருமணக்கோலத்தில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள், பூசகர்கள் வேத மந்திரங்களை முழங்க சிங்கம்புணரி கிராமத்தார்கள் நாட்டார்கள் முன்னிலையில் சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெண்கள் தங்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட மஞ்சள் கயிறை கழுத்தில் அணிந்து கொண்டனர். அதன்பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
சேவுகமூர்த்தி ஐயனார் கோவிலில் இன்று கழுவன் திருவிழாவும், எதிர்வரும் 13ஆம் தேதி தேரோட்டமும், 14ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவமும் நடைபெற்று, அன்றே வைகாசி விசாகத் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் சிங்கம்புணரி கிராமத்தார்கள் நாட்டார்கள் விரிவாகச் செய்துள்ளனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.