2019ஆம் ஆண்டு திருடிய நகையை தற்போது Whatsapp ஸ்டேட்டஸில் வைத்ததால் பெண் ஒருவர் வசமாக காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் தென்காசியில் நிகழ்ந்துள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியையான தென்காசி, சிவந்தி நகரை சேர்ந்த பங்கஜவள்ளியின் வீட்டில் கடந்த 2019ல் 16 பவுன் தங்க சங்கிலி ஒன்று காணாமல் போனது. இதுகுறித்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் எவ்வளவோ முயற்சித்தும் துப்பு கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில், பங்கஜவள்ளி தனது வீட்டில் வேலை பார்த்த மாப்ளரெட்டியார்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் மனைவி ஈஸ்வரி வைத்திருந்த வாட்ஸப் ஸ்டேட்டசைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் பங்கஜ வள்ளியின் வீட்டில் காணாமல் போன நகைகளை தனது கழுத்தில் அணிந்து கொண்டு ஈஸ்வரி பகுமானமாக போஸ் கொடுத்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
உடனடியாக காவல்துறைக்கு பங்கஜவள்ளி தகவல் அளித்த நிலையில், ஈஸ்வரியைக் கைது செய்து சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல நகையைத் திருடி விட்டு 3 ஆண்டுகள் கழித்து அதை ஸ்டேட்டஸில் வைத்து, பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– பாரூக்.