சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு தொடங்க முடிவு! ப.சிதம்பரம் எம்.பி நேரில் ஆய்வு!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி 5 மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனை, 1970ஆம் ஆண்டு துவங்கப்பட்டு சுற்றுவட்டார பொதுமக்களுக்கு மிகச்சிறப்பாக மருத்துவ சேவை செய்து வருகிறது. இந்த தாலுகா தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் வெளிநோயாளிகளாக சராசரியாக 500 முதல் 600 நோயாளிகளும், உள்நோயாளிகளாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 நபர்கள் வரையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு சிறுநீரகம் தொடர்புடைய நோயாளிகள் அதிகம்பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். இவ்வகை நோயாளிகளை மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்ப வேண்டியுள்ளது.
இந்நிலையில் சிறுநீரக நோயாளிகளுக்கு அச்சிகிச்சையினை சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையிலேயே செய்வதற்கு ஏதுவாக சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் (டயாலிசிஸ் இயந்திரம்) அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனிடையே சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டி, அதில் இரண்டு சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைத்துத் தருவதற்காக ₹.80 லட்சம் நிதியை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கித்தர முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான ப.சிதம்பரம் இசைவு தெரிவித்தார்.
அதனையடுத்து, நேற்று காலை சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு வந்த ப.சிதம்பரம், மருத்துவமனை வளாகத்தில் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவு அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்த சிங்கம்புணரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை செய்தார். முன்னதாக அவரை, மருத்துவ அலுவலர் அய்யன் ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்வில் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் மருதிப்பட்டி ஜெயராமன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் ராஜேந்திர குமார் மற்றும் வீரமணி, நகர தலைவர் தாயுமானவன், நகரச் செயலாளர் குழந்தைவேலன், திமுக பிரமுகர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்து கொள்ள மதுரை, சிவகங்கை போன்ற நகரங்களுக்கு சிங்கம்புணரி சுற்று வட்டார பொதுமக்கள் செல்ல வேண்டியிருந்த நிலையில், தற்போது சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையிலேயே புதிய தொழில்நுட்பங்களுடன் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவு விரைவில் அமைய உள்ள தகவல், ஏழை எளிய மக்களுக்கு மகிழ்வை தந்துள்ளது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.