
வால்பாறை ஜனநாயகத்தின் திருவிழாவான தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வால்பாறையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் மற்றும் பணி ஒதுக்கீட்டில் காட்டும் பாரபட்சம் ஆசிரியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை பகுதியில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்களை நியமிப்பதில் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அவர்களுக்கு இளைய நிலையில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கீழ் (Poling Officers) பணிபுரிய ஆணையிடப்பட்டுள்ளது.
பணி மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்தல் அதிகாரி (Presiding Officer) பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக தேர்தல் அதிகாரி பதவிகளை வாரி வழங்கியுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இது குறித்து கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக நியாயம் கேட்கும் ஆசிரியர்களை அரசுக்கு எதிரானவர்கள் என்றும் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக செயல்படுபவர்கள் என்றும் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அனுப்பி வருவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாங்கள் அரசுக்கும் மக்களுக்கும் சேவை செய்யவே ஆசிரியப் பணியில் சேர்ந்தோம் ஆனால் எங்கள் சுயமரியாதையைச் சிதைக்கும் வகையில் எங்களுக்குக் கீழ் உள்ளவர்களிடம் கைகட்டி வேலை செய்யக் கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? எனப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தங்கள் தரப்பு நியாயத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் முறையாகக் கொண்டு செல்லாமல் வால்பாறை அதிகாரிகள் மழுப்பி வருவதால் அடுத்தகட்டமாகப் பயிற்சி வகுப்புகளைப் புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர் சங்கங்கள் அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
பணி மூப்பு மற்றும் தகுதிக்கு ஏற்ப தேர்தல் பணிகளை மாற்றியமைக்க வேண்டும்,
ஆசிரியர்கள் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற அரசியல் முத்திரை புகார்களைத் திரும்பப் பெற வேண்டும்,
மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக தலையிட்டு சுமூகமான சூழலை உருவாக்க வேண்டும்.
வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற முதுகெலும்பாக இருக்கும் ஆசிரியர்களுக்கே இந்த நிலை நீடித்தால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு தீர்வு காணுமா அல்லது ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– வால்பாறை 𝗣.பரமசிவம்.












