
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை நடத்திய அதிரடி மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணையில் முக்கியக் குற்றவாளி சிக்கியுள்ளார்.

“நகக்கீறல் கொடுத்த க்ளு… சிக்கிய காமக் கொடூரன்!” – விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஐஜி உறுதி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் படுபயங்கரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் துப்பு துலக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தென் மண்டல காவல்துறை தலைவர் (IG) விஜயேந்திர பிதாரி உறுதிப்படுத்தியுள்ளார். குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இது குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
*10 தனிப்படைகளின் அதிரடி வேட்டை:*
மாணவி கொலை செய்யப்பட்டதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. சந்தேகத்திற்குரிய மற்றும் குற்றப்பின்னணி கொண்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்களைப் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
*அறிவியல் பூர்வமான ஆதாரங்கள்:*
இந்த வழக்கில் குற்றவாளியை அடையாளம் காண்பதில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.
*நகக்கீறல்கள்:* பிடிபட்ட 27 வயது மதிக்கத்தக்க வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலில் நகக்கீறல்கள் இருந்தன. இது போலீசாருக்கு முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
*டி.என்.ஏ சோதனை:* உயிரிழந்த மாணவியின் நகங்களுக்குள் சதைத் துணுக்குகள் சிக்கியிருந்தன. போராட்டத்தின் போது மாணவி குற்றவாளியைத் தடுக்க முயன்றதில் அவரது நகங்கள் குற்றவாளியின் சதையைக் கிழித்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. அந்தச் சதைத் துணுக்கை வைத்து டி.என்.ஏ (DNA) சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் முடிவுகள் அந்த இளைஞருடன் ஒத்துப்போனதால் அவர் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.
*வாக்குமூலம் மற்றும் விசாரணை:*
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்த இளைஞர் மாணவியை எப்படி கடத்தினார், எதற்காகவும், எப்படி கொலை செய்தார் என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது. பாலியல் அத்துமீறல் முயற்சியில் தோல்வியடைந்ததால் மாணவியைக் கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
*சட்ட நடைமுறை:*
ஒருவரை முறையாகக் கைது செய்தால் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதால், போலீசார் அனைத்து அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் திரட்டிய பிறகே முறைப்படி கைதைக் காட்டியுள்ளனர். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் முழு விவரங்களையும், குற்றவாளியின் பின்னணி குறித்தும் மாவட்ட காவல்துறை விரைவில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 நாட்களாகத் தொய்வின்றி நடைபெற்ற இந்த விசாரணை தற்போது ஒரு முக்கிய முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
பரணி பாலா












