பள்ளிக்கு பாடம் கற்க ஆசையாய் ஓடி வரும் மாணவர்கள், தினமும் காலையில் பார்ப்பது மதுபாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுத்தும் ஒருவரும் கண்டு கொள்ளவில்லை’ என, வேதனையில் குமுறுகின்றனர் குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள். இப்பள்ளி, குறிச்சி குளக்கரை அருகில், 3.7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ஆறு முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் படிக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை, 80 என்ற மாணவர் எண்ணிக்கையில் மூடுவிழாவை எதிர்நோக்கி இருந்தது.
தற்போது, தலைமையாசிரியர், சக ஆசிரியர்களின் முயற்சியால், 300 மாணவர்கள் படிக்கின்றனர்.இப்பள்ளியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 300 மீட்டர் அளவில் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுக்க, பல்வேறு இடங்களில் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. விலையுயர்ந்த பொருட்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள சூழலில், சுற்றுச்சுவர் இன்றி, கதவுகளை பூட்டிச் சென்றாலும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இரவு நேரங்களில், பலர் மது அருந்தவும், தேவையற்ற சில காரியங்களுக்கும் இப்பள்ளியை பயன்படுத்தி வருகின்றனர்.
சமூக விரோதிகள் அருந்திய மதுபாட்டில்களை, தேவையற்ற குப்பைகளை பள்ளி வளாகங்களில் வீசிச் செல்வது சங்கடங்களை உருவாக்கியுள்ளது.ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ’10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சுவர் கேட்கிறோம். வகுப்பறை, கழிவறைக்கு நிதி ஒதுக்க மட்டுமே கல்வித்துறை அதிக கவனம் செலுத்துகிறது. மாணவர்கள், பள்ளியின் உடைமைகளின் பாதுகாப்பு கருதி, சுற்றுச்சுவர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்’ என்றார். பள்ளி தலைமையாசிரியர் கவிதாவிடம் கேட்டபோது,”இச்சிக்கல் குறித்தும், சுற்றுச்சுவர் அவசியம் குறித்தும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளோம். தன்னார்வலர்களையும் அணுகி வருகிறோம்,” என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.