ஆசிரியர்கள் – மாணவர்கள்! வகுப்பறையில் தலைதூக்கும் வன்முறை! தீர்வு என்ன?

மாணவர்கள் பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடப்பதும், ஆசிரியர்கள் கண்டித்தால் அவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதும், ஆசிரியர்களைத் தாக்குவதும் கடந்த சில மாதங்களாக அதிகரித்துவருகின்றது. இதுதொடர்பான காணொலிக் காட்சிகள் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரை ஆபாசமாகப் பேசி, தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் சம்பவத்தை பொறுத்தவரை மாதனூரில் தாவரவியல் முதுகலை ஆசிரியர் சஞ்சய் என்பவர் ரெகார்ட் நோட்டை சமர்ப்பிக்கும்படி மாணவர்களிடம் கூறியுள்ளார். அதனை சற்றும் பொருட்படுத்தாத ஒரு மாணவன், வகுப்பறையில் பாய் விரித்துப்படுத்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட ஆசிரியரை, மாணவர்கள் அடிக்கப் பாய்ந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, சேலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்காக முடிவெட்டி வர ஆசிரியர் அறிவுறுத்தியதால் கோபமடைந்த ஒரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர், அவரை பீர் பாட்டிலால் குத்த முயன்ற சம்பவம் ஆசிரியர்கள் வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதேபோல, தேனி தேவதானப்பட்டியில் புத்தகம் கொண்டுவராமல் பள்ளிக்கு வந்த மாணவனை ஒரு ஆசிரியர் கண்டிக்க, அந்த ஆசிரியரை கத்தியைக் காட்டி, மாணவன் மிரட்டிய சம்பவமும் நடந்தேறியது. அதே மாவட்டத்தில், தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தகம் கொண்டு வராத மாணவரை நோக்கி ஆசிரியர் சற்று கோபமாகக் கேட்க, அதற்கு அந்த மாணவர் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த சனிக்கிழமை கூட, வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இரும்பு மேசையை மாணவர்கள் உடைத்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட்டது. கன்னியாகுமரியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர் – மாணவர் மோதல் என்பது நடந்தேறியுள்ளது.

இதுபோன்ற மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், பள்ளிக்கு வருவதற்கே அச்சமாக இருப்பதாக பல ஆசிரியர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்களுக்கு அதில் ஈடுபடும் மாணவர்கள் மட்டும் பொறுப்பல்ல. அவர்களின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது சமூகம் மற்றும் அரசின் பொறுப்பு என்பதும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

இச்சம்பவங்கள் அனைத்தும் அரசுப் பள்ளிகளில்தான் நடக்கிறது என்பதால், அரசுப்பள்ளி மீதான அச்சம் உருவாகும் அபாயகராமான சூழலையும் இது ஏற்படுத்துகிறது. கொரோனா காலத்துக்குப் பின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்தது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை 2.96 லட்சம் என்றிருக்க, அங்கு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 1.20 கோடி என்றும், அவர்களில் ஆண் 40%, பெண் 60% என்றும் உள்ளனர். இவர்களில் கொரோனாவிற்கு பின் 5.50 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் புதிதாக சேர்ந்திருந்தனர். இவர்களில் 2000 சிபிஎஸ்சி மாணவர்களும், 40-50% மெட்ரிக்குலேசன் மாணவர்களும் அரசுப் பள்ளியில் சேர்ந்தனர். இப்படி கொத்துக் கொத்தாக அரசுப்பள்ளி நோக்கி திரும்பிய பெற்றோருக்கு, தற்போது கூடுதல் அச்சம் ஏற்படுகின்றது என்பது கவனிக்கத்தக்கது.

மாணவர்களின் இந்த ஒழுங்கீனப் போக்கை சரிசெய்வது குறித்து கல்வி உளவியலாளர் சரண்யா கூறும்போது, “மாணவர்களை எப்படி கண்டிப்பது என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களின் நடவடிக்கைகளுக்கு சில பெற்றோர்களே காரணமாக உள்ளனர். இன்றைய குழந்தைகளின் குறும்பு மிக அதிகமாக உள்ளது. தாங்கள் செய்வது தவறு என்ற உணர்வே குழந்தைகளுக்கு இல்லை. தவறு செய்த பின்னும் அதை உணர்வதில்லை. இதை எதிர்க்கும் ஆசிரியர்களை, அதிலும் அதிக கண்டிப்புடன் இருக்கும் ஆசிரியர்களை அம்மாணவர்கள் வெறுக்கின்றனர். வீட்டிலும் சூழல் மாறவேண்டியுள்ளது” என்றார்.

சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆசிரியரிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வதை நினைத்தால் வேதனையாக உள்ளது. இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது, துறை அமைச்சராக மட்டுமில்லாமல் இரண்டு குழந்தைகளின் தந்தையாக நான் வேதனைப்படுகிறேன். ஆசிரியர்கள் கோபத்தில் திட்டுவதைக் கூட இப்போதெல்லாம் மாணவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு காலத்தில் அடித்துத்தான் மாணவர்களை வளர்த்தார்கள். ஆனால், இப்போது அதெல்லாம் நடப்பதில்லை.

ஒவ்வொன்றையும் இன்றைய ஆசிரியர்கள் எடுத்துச் சொல்லித்தான் புரிய வைக்கிறார்கள். அதையும் தாண்டி வரம்பு மீறி சிலர் நடந்து கொள்ளும் போது, அவர்களைத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் சில தண்டனைகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்த வயதிலேயே உணர வைக்கவே தண்டனை வழங்கப்படுகிறது. இப்போது கூட மாணவர்கள் இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர். இதைப் பாடமாக எடுத்துக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் வகுப்புகளில் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதுதான் எங்கள் பொறுப்பு, அதை நாங்கள் நிச்சயம் செய்வோம். கொரோனா தொற்றுக்குப் பின்னர், இப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் மன ரீதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்வது நமது கடமை. மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார். அரசு தனது கவுன்சிலிங் மூலம் மாணவர்களை விரைந்து நல்வழிப்படுத்துவதே பிரச்னைக்கான உரிய தீர்வாக இருக்குமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், இது ஏதோ உளவியல் தாக்குதல் போல் தெரிவதாக சில சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். கொரோனாவுக்குப் பின்னர் அநேக பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆசைபட்டது உண்மை. அரசுப் பள்ளிகளும் தங்கள் தரத்தை மேம்படுத்த முயற்சிப்பதும் உண்மை.
ஆனால் இப்போது இந்த மாதிரியான காணொலிகள் வருவது எல்லாம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்வியும் எழுகிறது. நிகழ்வுகளை நாடகமாக்குவதில் திட்டமிட்ட சதி ஏதும் உள்ளதோ என்ற சந்தேகதேகமும் சமூகத்தில் உருவாகியுள்ளது.

– பாரூக் சிவகங்கை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp