மதுரையில் மூளைச்சாவு அடைந்த நபரின் கல்லீரல், விமானத்தில் சென்னை எடுத்து வரப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 52 வயது நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த சத்திய நாராயணன் என்பவர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது கல்லீரல் செயலிழந்தது. இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, சிகிச்சைக்காக சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்து, அங்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய 39 வயதுடைய ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. எனவே, அவரது குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
இதைனையடுத்து, நேற்று முன்தினம் ஸ்டான்லி மருத்துவக் குழுவுடன் இணைந்து, மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம், ஒரு மணி நேரத்தில் அவரது கல்லீரல் கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் தயார் நிலையிலிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு வரப்பட்டது.
கல்லீரல் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் ஜஸ்வந்த் தலைமையில், மயக்க மருந்து துறை பேராசிரியர் மாலா, கல்லீரல் மருத்துவ சிகிச்சைப் பிரிவு தலைவர் ரேவதி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் சத்திய நாராயணனுக்கு, 12 மணி நேரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜி கூறுகையில், “கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறையில், 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை 81 பேருக்கு உடல் உறுப்பு தானம் பெற்று, மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். இது அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
சத்திய நாராயணனுக்கு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.
– பாரூக்.