திருமண போட்டோஷூட்டுக்காக கரைபுரண்டோடும் ஆற்றில் ஷூட்டிங் நடத்திய தம்பதிகள் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகினர். இந்த விபத்தில் கணவர் பலியானார். காயங்களுடன் மீட்கப்பட்ட மனைவி கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அழகான நினைவுகளை என்றும் நினைவுகூறும் விதமாக திருமண புகைப்படங்கள் இருக்கும். அதனால் திருமணங்களுக்கு போட்டோ எடுப்பது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. தற்போதெல்லாம் இந்த போட்டோஷூட் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது. திருமணத்துக்கு முன்பு, பின்பு, கேண்டிட் என மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் போட்டோஷூட் செய்யப்படுகிறது. சினிமாவுக்கு லொகேஷன் தேடுவதைப்போல இதற்காகவும் பல இடங்களைத் தேடிச் சென்று ஷூட் செய்து வருகின்றனர். அதற்காக ஆறு, மலை போன்ற இடங்களையும் போட்டோகிராபர்கள் செலக்ட் செய்கின்றனர். ஆனால் சில நேரங்களில் ஆபத்தை உணராமல் போடோஷூட் செய்வது விபத்துக்கும் வழிவகுக்கிறது.
கோழிக்கோடு அருகேயுள்ள குற்றியாடி பாலேரி பகுதியைச் சேர்ந்தவர் ரெஜின்லால் (28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கனிகா என்பவருக்கும் கடந்த மாதம் 14ம் தேதி திருமணம் முடிந்தது. இவர்களுக்கு கல்யாணத்துக்கு பிந்தையை போட்டோஷூட் நடத்த திட்டமிட்ட போட்டோகிராபர்கள், தம்பதியை குற்றியாடி ஆற்றுப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர். மணமக்கள், போட்டோகிராபர்கள், சில உறவினர்கள் என பலரும் குற்றியாடி ஆற்றுப்பகுதிக்கு வர, போட்டோஷூட் தொடங்கியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக கணவர் ரெஜின்லால் ஆற்றுக்குள் விழுந்தார். அவரோடு சேர்ந்து மனைவியும் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் பதறிப்போக, மணமகளை மீட்டுள்ளனர். ஆனால் கணவர் ரெஜின்லால் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருந்தார்.
காயமடைந்த கனிகாவை கோழிக்கோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நீரில் மூழ்கி படுகாயமடைந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பேராம்பிரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுமணத் தம்பதிகளுக்கு நடந்த இந்தத் துயர நிகழ்வு, கேரள மக்களை சோகமடையச் செய்துள்ளது.
– ராயல் ஹமீது.