ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு அரசு பேருந்தில் 15 கிலோ கஞ்சா கடத்திய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். வேலூர் மண்டல கலால் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் இளங்கோவன், உதவி ஆய்வாளர் சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வபதி மற்றும் காவலர்கள் சிவக்குமார், அரங்கநாதன் உள்ளிட்டோர், அடங்கிய குழுவினர் கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து வேலூர் வழியாக திருச்சி செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் சோதனையிட்டனர்.
பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக பெண்கள் வைத்திருந்த பெரிய பையை சோதனையிட்டதில் 7 பார்சல்களில் இருந்து சுமார் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்த சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரியான கலைவாணி மற்றும் முனியம்மாள் என்பது தெரியவந்தது அவர்கள் திருப்பதியில் இருந்து கஞ்சா பார்சலை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.இதையடுத்து இருவரையும் பிடித்து வேலூர் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் வசம் ஒப்படைத்தனர்.பின்பு அவர்கள் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் கைது செய்தனர்.
-P. இரமேஷ் வேலூர்.