இஸ்லாமியர் எனக் கருதி, இந்து முதியவரை அடித்தே கொன்ற பாஜக நிர்வாகி! மத வெறுப்புணர்வினால் கொடூரம்!

 

இஸ்லாமியர் என்ற சந்தேகத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், ரட்லம் மாவட்டம், சார்ஸி பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் ஜெயின் (65). முதுமை காரணமாக அவரது மனநலம் சற்று பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தனது மகனுடன் அவர் தங்கியிருந்தார். இதனிடையே, ஒரு கோவில் நிகழ்ச்சிக்காக பன்வாரிலாலை அழைத்துக் கொண்டு அவரது மகன் குடும்பத்தினர் கடந்த வாரம் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.

பின்னர், அவர்கள் மத்தியப்பிரதேசம் திரும்பும் வழியில் பன்வாரிலால் திடீரென மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, பன்வாரிலால் காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பன்வாரிலாலின் சடலத்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர். தொடர்ந்து, பன்வாரிலால் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், பன்வாரிலாலை பாஜக பிரமுகர் ஒருவர் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைலாகப் பரவியது. அதில், நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான தினேஷ் குஷ்வாஹா என்பவர், சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பன்வாரிலாலை எழுப்புகிறார். பின்னர் “தேரா நாம் முகமது ஹய்?… ஆதார் கார்ட் திகா…’ (உனது பெயர் முகமதுவா? உனது ஆதார் அட்டையைக் காட்டு)” எனக் கேட்டு தினேஷ் குஷ்வாஹா, பன்வாரிலாலை சரமாரியாக அறைகிறார். அதற்கு, “200 ரூபாயை பெற்று கொண்டு என்னை விட்டுவிடு” என பெரியவர் கெஞ்சிக் கேட்டும், தினேஷ் கொஞ்சமும் கருணையின்றி கொடூரமாகத் தாக்கி கொண்டே இருக்கிறார். இவ்வாறு சுமார் 14 முறை முதியவரை அவர் பலமாக அறைகிறார். இதில் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து கீழே சரிந்து பன்வாரிலால் உயிரிழந்து விடுகிறார். இந்தக் காணொலி மத்தியப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைப் பார்த்த பன்வாரிலால் குடும்பத்தினர் தினேஷ் குஷ்வாஹா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ் குஷ்வாஹா மீது கொலை வழக்கு பதிவு செய்து சனிக்கிழமை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மனநலம் பாதித்த இந்து முதியவரை, இஸ்லாமியர் என நினைத்து அடித்தே கொன்றிருப்பது மத வெறுப்புணர்வின் ஆழத்தை காட்டுவதாக, சமூக நல்லிணக்கத்தை நேசிக்கும் பலர் இது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்!

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp