கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை மீன்கரை சாலை திவான்சாபுதூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே துறை ஊழியர் சண்முகம் ( 70 ). இவர் தனது பைக்கில் நேற்று கோவை அடுத்த சூலூர் கல்பாவிஹார் இந்திய விமானப்படை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தனது மகன் மணி என்பவர் கட்டி வருகின்ற புது வீட்டை பார்ப்பதற்காக பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு வழியாக சென்று கொண்டிருந்த பொழுது கிணத்துக்கடவு குருநல்லி பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் சமையல் கியாஸ் சிலிண்டர் ஏற்றி கொண்டு லாரியில் பைக்குக்கு பின்னாடி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென லாரி பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சண்முகம் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து கிணத்துக்கடவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.